கருப்பு பூஞ்சைக்கான மருந்தை போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் – ஓ.பி.எஸ் கோரிக்கை!

AIADMK co-ordinator O. Panneerselvam has demanded that adequate stocks of black fungus medicine be kept available in case the spread of black fungus increases.

கருப்பு பூஞ்சை பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை போதுமான அளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதன் பாதிப்புகளே இன்னும் ஓயாத நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக கருப்பு பூஞ்சை தொற்று தற்போது பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நோய் இன்னதென்று கண்டறிந்து, பின் அது உண்டான காரணத்தை அறிந்து, அதன்பின் அந்நோயை படிப்படியாக நீக்கும் வழிமுறையைக் கையாண்டு, நோய் நீங்கும்படி மருத்துவம் செய்ய வேண்டும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க கொரோனா நோய்த் தொற்றினை முற்றிலும் களைவதற்கு உண்டான நடவடிக்கைகளை மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், “பட்ட காலிலே படும்” என்பதற்கேற்ப கொரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகள், கறுப்பு பூஞ்சை என்ற நோயால் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் இதுவரை 11,717 நபர்கள் கறுப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது. இந்த நோயினால் குஜராத், மகாராஷ்டிரா. ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயினால் தமிழ்நாட்டில் 226 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மூன்று நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் ஓசூர் பகுதியில் கறுப்பு பூஞ்சை வேகமாக பரவி வருவதாகவும், கொரோனா தொற்றினால் நோய் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாவதாகவும், இத்தொற்றுக்கான மருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லை என்றும், ஒரு டோஸ் மருந்து பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்துகள் இல்லை என்றும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களை சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதாகவும் அம்மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனரே தெரிவித்ததாக பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது. இந்த நோய்த் தொற்றின் பரவல் அதிகரிக்கும்பட்சத்தில், அதை சமாளிப்பது என்பது அரசுக்கு மிகப் பெரிய சவாலாகிவிடும்.

எனவே, “வருமுன் காப்போம்” என்பதற்கேற்ப அரசின் செயல்பாடு இருப்பது அவசியம் என்பதோடு மட்டுமல்லாமல், இதற்குத் தேவையான Amphotericin B மருந்தினை போதுமான அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளவும், இந்த நோயினை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டு கொண்டுள்ளார்.

unknown node