அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார்!

A complaint has been lodged with the Madurai Collector alleging impersonation in the Alankanallur Jallikattu competition.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பேர் ஒரே டி-சார்ட் அணிந்து ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதாக மதுரை கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பேர் ஒரே டி-சார்ட் அணிந்து ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதாக மதுரை கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில், இந்த போட்டியை முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொடங்கி வைத்தனர். முதல் சுற்றில் 33-வது எண் பனியன் அணிந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் களமிறங்கியுள்ளார். 3 சுற்றுகளுக்கு பின் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அந்த நம்பர் உள்ள பனியனை கழற்றி, மற்றொரு நபரிடம் அதாவது கண்ணன் என்பவரிடம் வழங்கிவிட்டு, சுற்றிலிருந்து வெளியேறி உள்ளார்.

இந்நிலையில், அந்த பனியனை அணிந்துகொண்டு களமிறங்கிய கண்ணன் 12 காளைகளை பிடித்துள்ளதாக கணக்கிடப்பட்டு, அவர் முதலிடம் பெற்றதாக  தேர்வு செய்யப்பட்டு கார் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசு கருப்பண்ணன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்கனவே ஹரிகிருஷ்ணன் பிடித்த 7 காளைகள் கண்ணன் பிடித்த 5 காளைகளை சேர்த்து 33ஆம் நம்பர் பினியன் அணிந்தவர் அதிக காளைகளை பிடித்ததாக கணக்கிடப்பட்டு, அவர் முதல் இடம்பெற்றதாகவும் தேர்வு செய்யப்பட்டதாக கருப்பண்ணன் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பதிவேட்டில் 33-வது நம்பரில்  கண்ணன் பெயர்  இடம்பெறவில்லை. அந்த பதிவேட்டில் ஹரிகிருஷ்ணன் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சிறந்த வீரர்கள் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதாக மதுரை ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியர் விழா கமிட்டியினரை அழைத்து பேசவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார்!