ஆவணம் எழுதுவோர் சார்பதிவாளர் அலுவலகங்களில் நுழையக்கூடாது – பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை!

ஆவணம் எழுதுவோரின் நடமாட்டத்தை கண்காணிக்க தவறும் சார் பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை.
சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் எழுதுபவர்கள் நுழையக்கூடாது என பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆவணம் எழுதுவோரின் நடமாட்டத்தை கண்காணிக்க தவறும் சார் பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்களின் அத்துமீறல் அதிகரித்து வருவதாக குற்றசாட்டு எழுந்ததால் பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அலுவலக நிமித்தமாக சார் பதிவாளரால் அழைக்கப்பட்டால் மட்டுமே தவிர, மற்றபடி ஆவணம் எழுதுவோர் அலுவலகங்களில் நுழையக்கூடாது.
விதிகளை மீறுவோர் மீதும் கண்காணிக்க தவறும் சார்பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பதிவாளர்கள், மண்டல தலைவர்கள் ஆய்வின்போது நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் உள்ள பதிவுத்துறை அலுவலகங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை இணைய வழியில் செலுத்தலாம். பதிவுத்துறையை மேம்படுத்த ஸ்டார் 3.0 எனும் பதிவுத்துறை செயலி விரைவில் கொண்டு வரப்படும் என பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார்.
மேலும், ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் பதிவுத்துறை அலுவலகத்திற்கு நுழையக் கூடாது. பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் பதிவுத்துறை தலைவருக்கு புகார் தரலாம் என்றும் பத்திரப்பதிவுக்கு வருவோர் பணம் கொண்டு வர தேவையில்லை, ஏடிஎம் கார்டு மூலம் பதிவு கட்டணம் செலுத்தலாம் எனவும் கூறியிருந்தார்.