சென்னை :2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரைக்கு எதிராக ”புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பரப்புரை லோகோவை இபிஎஸ் வெளியிட்டார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு வரும் 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தனது சுற்றுப்பயணத்தை இபிஎஸ் தொடங்குகிறார்.
நேற்று முன்தினம் (ஜூலை 3) முதல் வீடு வீடாக சென்று திமுகவினர் பரப்புரை செய்து வரும் நிலையில், அதிமுகவும் களத்தில் இறங்குகிறது. இதனை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி , ” கோவை மேட்டுப்பாளையத்தில் 7ம் தேதி முதல் சுற்றுப்பயணம், திமுக ஆட்சியை அகற்றவே சுற்றுப்பயணம் செல்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களின் குரலாகவே அதிமுக இருந்து வருகிறது, நான் எப்போதும் மக்களுடன்தான் பயணிக்கிறேன். என் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு மிகப்பெரிய நோக்கம் உண்டு. பிரச்சார பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு, பலமான கூட்டணி அமைக்கப்படும்.
ஓரணியில் தமிழ்நாடு என்பது திமுகவின் பலவீனத்தைக் காட்டுகிறது. உடம்புக்கு உயிர் முக்கியம் என்பதுபோல, வெற்றிக்கு தேர்தல் வாக்குறுதி ரொம்ப முக்கியம். இப்போதே அறிவித்துவிட்டால் நீர்த்துப்போய்விடும், தேர்தல் நேரத்தில் அற்புதமாய் வெளிவரும். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி, நான்தான் முதலமைச்சர் வேட்பாளர், எங்களுடன் கூட்டணியில் உள்ளவர்களை தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்துக்கு அழைத்துள்ளோம்” என்று பேசியுள்ளார்.
