திருச்சி :பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, நேற்று (ஜூலை 26) மாலை 7:50 மணிக்கு தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்து, ரூ.452 கோடி செலவில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் தூத்துக்குடி நிகழ்ச்சிக்குப் பிறகு, பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியை திருச்சி விமான நிலையத்தில் வரவேற்ற தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கீழ்கண்ட 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
1. விவசாயிகளுக்கு வங்கிகள் விவசாய கடன் வழங்கும்போது சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
2. தமிழ்நாட்டின் நீர்ப்பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கோதாவரி-காவிரி ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
3. தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்.
கோதாவரி-காவேரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் திருச்சி விமானநிலையத்தில் பிரதமரை வரவேற்று ஈபிஎஸ் மனு அளித்துள்ளார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை மனுவை பரிசீலித்து ஆவண செய்வதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி அளித்தார்.
இந்தச் சந்திப்பு, அதிமுக-பாஜக கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அரசியல் ரீதியாக நடந்த முக்கியமான சந்திப்பாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது, எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சிரித்த முகத்துடன் வரவேற்க, பிரதமரும் சிறப்பான மரியாதை அளித்துள்ளார்.
unknown node