#Breaking:இலங்கை கடற்படை அட்டூழியம்:மண்டபம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தம்!

Fishermen in the Mandapam area have gone on strike condemning the capture of Tamil Nadu fishermen by the Sri Lankan Navy.

ராமநாதபுரம்:தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றதை கண்டித்து மண்டபம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த டிச.18 ஆம் தேதியன்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளுடன் 43 மீனவர்களைச் சிறைபிடித்து சென்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு,அவர்கள் டிச.31-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனையடுத்து,சில மணி நேரங்களே ஆன நிலையில்,மேலும் மண்டபம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்களை இரண்டு படகுகளுடன் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்து தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றனர்.

அதன்பின்னர்,ஜெகதாப்பாட்டினம் மீனவர்கள் 14  பேரை நேற்றும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.இதனால்,ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,இன்று புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டதை அறிவித்துள்ளனர். இதன்காரணமாக,ஜெகதாப்பாட்டினத்தில் 1,200 மீனவர்களின் போராட்டத்தால் 200 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதி மீனவர்கள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி,மண்டபம் பகுதியில் 400 விசைப்படகுகளை சேர்ந்த 1000 மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும்,தங்கச்சிமடத்தில் நாளை நடைபெறவுள்ள உண்ணாவிரதப்போராட்டத்தில் மண்டபம் பகுதி மீனவர்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.