குடும்பத்தை சிதைத்து, மன உளைச்சல் ஏற்படுத்துவதாக நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி புகார்!

Former Minister Manikandan's wife has lodged a complaint with the Ramanathapuram District Superintendent of Police against actress Chandini for making false allegations against her husband and with the intention of ruining family life.

தன் கணவர் மீது பொய்யான புகார் கொடுத்து குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் நோக்கத்தோடு செயல்படுவதாக நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் ராமநாதபுரம் அதிமுக எம்எல்ஏவும், அமைச்சரும் ஆகிய மணிகண்டன் தன்னுடன் 5 வருடம் குடும்பம் நடத்தி விட்டு பல முறை கருக்கலைப்பு செய்ய வைத்து தன்னை துன்புறுத்தி தற்பொழுது தன்னை ஏமாற்ற பார்ப்பதாக நாடோடிகள் பட துணை நடிகை சாந்தினி அண்மையில் புகார் அளித்திருந்தார். மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அமைச்சர் மணிகண்டன் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த மணிகண்டன் தனக்கு சாந்தினியை யாரென்றே தெரியாது எனவும், தான் ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த பொழுது பலரை சந்தித்துள்ளதாகவும், அப்போது எடுத்த புகைப்படத்தை வைத்து தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இது குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், தனது குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் நோக்கத்தோடு தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக துணை நடிகை சாந்தினி தனது கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சாந்தினி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி கொடுத்த புகாரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அவர்கள் மதுரை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து, அங்கிருந்து சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு அனுப்பி புகாரை விசாரிக்க பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.