டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு தொடர்பு இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

ED - Madras Highcourt

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமான ஆதாரங்களாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு டாஸ்மாக்கில் மதுபான கொள்முதல், பார் உரிமங்கள் வழங்குதல், மதுபான போக்குவரத்து டெண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ரூ.1000 கோடி மதிப்பிலான முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த முறைகேடுகளில் சில முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சந்தேகித்தது.

அதன்படி, ஆகாஷ் பாஸ்கரன், தமிழ் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராகவும், “Dawn Pictures” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளவர். அவர் தயாரித்து வரும் படங்களில் தனுஷின் “இட்லி கடை”, சிவகார்த்திகேயனின் “பராசக்தி”, சிம்புவின் 49வது படம் ஆகியவை அடங்கும்.

அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரன் இந்த முறைகேடுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கலாம் என்ற ச ந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியது. கடந்த மே மாதம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆகாஷ் பாஸ்கரனின் வீடு, அவரது அலுவலகம், மற்றும் பல தொழிலதிபர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தியது.

ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் இருந்து இரண்டு செல்போன்கள், ஒரு மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன், தொழிலதிபர் ரத்தீஷ், தேவக்குமார் ஆகியோரின் இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, அமலாக்கத்துறையின் சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை சட்டவிரோதமானவை என்று கூறி, ஆ காஷ் பாஸ்கரனும் விக்ரம் ரவீந்திரனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அமலாக்கத்துறை தன்னை விசாரணைக்கு அழைத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், அவர்களின் ஆவணங்கள் முறையாக இல்லை என்றும் ஆகாஷ் பாஸ்கரன் வாதிட்டார். ஆகாஷ் பாஸ்கரனின் வழக்கறிஞர்கள், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், ஆகாஷ் பாஸ்கரனுக்கு டாஸ்மாக் முறைகேடுகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறினர்.

மேலும், அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணங்கள் முழுமையானவை அல்ல என்றும், அவை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை நிரூபிக்கவில்லை என்றும் வாதிட்டனர். இறுதியில், இன்று டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை இன்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த நிலையில், அமலாக்கத்துறையின் வாதத்திற்கும், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமலாக்கத்துறை மீது உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

வீடுகளில் சோதனை நடத்தி, நோட்டீஸ் ஒட்டிய அமலாக்கத்துறைக்கு எதிராக, ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான இன்றைய விசாரணையில், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கும் டாஸ்மாக் வழக்கில் தொடர்பு இருப்பதாக நீங்கள் கூறிய வாதத்திற்கும் சமர்ப்பித்துள்ள ஆவணங்களுக்கும் தொடர்பு இல்லை எந்த அதிகாரத்தில் வீடுகளை சீல் வைத்தீர்கள்? என அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, பொருள்கள் ஒப்படைக்கப்படும், நோட்டீஸ் திரும்பப் பெறப்படும் என அமலாக்கத்துறை தெரிவித்தது. டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற அமலாக்கத்துறை ஒப்புதல் அளித்ததோடு, இருவரது வீடுகள், அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை திருப்பி ஒப்படைக்கவும் ஒப்புதல் அளித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்