சென்னை : சட்டப்பேரவையில் உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டது போல அரிசி விலை பெருமளவு ஏறவில்லை என்றும், அரிசி விலை கிலோவுக்கு 6 முதல் 7 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த விலை உயர்வு நம் மாநிலத்தில் மட்டும் நிகழ்ந்ததல்ல என்றும், அண்டை மாநிலங்களிலும் இதே நிலைதான் உள்ளதாகவும், வளைகுடா போர் (Gulf War) காரணமாகவே இந்த விலை ஏற்றம் ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
சன்ன ரக நெல்லை ரேஷன் அரிசியாக வழங்குவது சாத்தியமில்லை என்றும், தாளடி பட்டத்தில் மட்டுமே சன்ன ரக நெல் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும் கே.என்.நேரு தெளிவுபடுத்தினார்.
2025 செப்டம்பர் வரை 64.52 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 32.29 லட்சம் மெட்ரிக் டன் சன்ன ரகம் அடங்கும் என்றும் அமைச்சர் வெங்கடரமணன் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்தார்.
அமைச்சர் வெங்கடரமணன் ஒரு தணிக்கையாளர் (Auditor) என்பதால் கணக்குகளை நன்றாகக் கூறுகிறார் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். மேலும், தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் கூட நெல்மணிகள் மழை நீரில் நனைந்து கொண்டுதான் இருக்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சிக் காலத்தில் ரேஷன் அரிசி ஆடு மற்றும் கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்பட்டதாக செங்கோட்டையன் பேசியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், திமுக எம்.எல்.ஏ.க்களின் கடும் எதிர்ப்பையும் அமளியையும் உண்டாக்கியது.
மேலும், பல மக்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்தபோது, தாங்கள் பெறும் ரேஷன் அரிசியை இட்லி மற்றும் தோசை போன்ற உணவுகளுக்கே பயன்படுத்துவதாகவும், அதனைப் பயன்படுத்த முடியாமல் போகவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்ததாக உணவுத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் வெங்கடரமணன் குறிப்பிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
