சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
திமுக கமல்ஹாசன் அவர்களுக்கு சீட் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல் வரும் ஜூன் மாதம் 19-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் மாதம் 9-ம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த சூழலில், திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதிமுக கூட்டணி, வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இரண்டு இடங்களைப் பெறுவதற்கு வலுவான வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலின்போது, தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படும் என அதிமுகவிடம் இருந்து வாய்மொழி உறுதிமொழி பெறப்பட்டதாக தேமுதிக தரப்பு தெரிவிக்கிறது. இதனால், தேமுதிக தங்களுக்கு ஒரு இடம் உறுதியாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் உள்ளது.
ஆனால், எடப்பாடி இந்த வாய்மொழி உறுதிமொழி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முற்றிலும் மறுத்துள்ளார். தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் வழங்குவதாக எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். எனவே, இது, இரு கட்சிகளுக்கு இடையே இதனால் குழப்பமும் இருந்து வருகிறது.
இப்படியான சூழலில் ஏற்கனவே “பொறுமை கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்து இருந்து பார்ப்போம். சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை” என பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய பிரேமலதா ” திமுக கமல்ஹாசன் அவர்களுக்கு சீட் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். அதன்படி அவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப்போல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தையை நிரூபிக்க வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன். தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லை என்றால் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். அப்போது அது குறித்து முடிவெடுக்கப்படும்” எனவும் பேசினார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் ” கூட்டணி, போட்டி விவரங்களை ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில்தான் அறிவிப்போம். விரைவில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளோம்” எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.