ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டு…நாளை கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி!
நாளை காலை முதல் மாவட்ட வாரியாக மாவட்ட & மாநில நிர்வாகிகளை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார்.

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில் வெடிக்கும் வகையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசிய விஷயங்கள் மாறியுள்ளது. இன்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “50 ஆண்டுகளாக கட்சியை வளர்த்தேன், ஆனால் அன்புமணி ஒரு நொடியில் அதை உடைத்துவிட்டார்,” என குற்றம் சாட்டினார்.
அது மட்டுமின்றி ” தவறான ஆட்டத்தை துவங்கி வைத்த அன்புமணி, பொதுக்குழு மேடையில் என் தலை மீது மைக்கை போடாததுதான் குறை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு, வளர்த்த கடா மார்பில் எட்டி உதைப்பதுபோல் அன்புமணி உதைத்துவிட்டார், தன் தாயின் மீதே பாட்டிலை தூக்கி அடித்தவர் அன்புமணி ” எனவும் வெளிப்படையாகவே பேசினார்.
எனவே, ராமதாஸ் இப்படி கூறியதில் இருந்து பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக வெடித்திருக்கும் நிலையில், நிர்வாகிகளுக்கு அன்புமணி முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியானது. அது என்னவென்றால், பா.ம.க.வினர் யாரும் தற்போது தன்னை சந்திக்க சென்னை அக்கரை வீட்டிற்கு வர வேண்டாம் எனவும் நான் அழைக்கும் வரை நிர்வாகிகள் காத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தற்போது ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டுக்கு மத்தியில், நாளை கட்சி நிர்வாகிகளை நாளை அன்புமணி சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பானது சென்னை சோழிங்கநல்லூரில் மே 30, முதல் மூன்று நாட்களுக்கு (வெள்ளி, சனி, ஞாயிறு) நடைபெறவுள்ளது. மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அன்புமணி வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலை எக்ஸ் தளத்தில் பாமகவைச் சேர்ந்த தருமபுரி மாவட்ட செயலாளர் பூபால் தெரிவித்துள்ளார்.