மேட்டூர் அணை இன்று திறப்பு…, டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி.!
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணை பகுதிக்கு வந்து தண்ணீரை திறந்துவிட உள்ள நிலையில், முன்னதாக அணை பகுதியை சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலின், 11 கி.மீ. தொலைவிற்கு ரோடு ஷோ நடத்தி, பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார். மேலும், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் திட்டமிட்டுள்ளார்.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கிறார்.
இதனால், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
குறிப்பாக, குறுவை, சம்பா, மற்றும் தாளடி போன்ற முப்போக சாகுபடிக்கு இந்த நீர் பயன்படுத்தப்படும். காலை 9 மணியளவில் மேட்டூர் அணையின் மேல்மட்ட மதகுகளை மின் விசையால் இயக்கி முதலமைச்சர் தண்ணீரை திறந்து வைப்பார். காவிரி ஆற்றில் மலர் தூவி வரவேற்பு செய்யப்படும்.
அணையின் நீர் இருப்பைப் பொறுத்து, தண்ணீர் திறப்பு அளவு மாறுபடும். தற்போது அணையின் நீர்மட்டம் சுமார் 113.54 அடியாக உள்ளது, ஆனால் நீர்வரத்து குறைவாக (151 கன அடி/வினாடி) இருப்பதால், பாசனத்திற்கு 5,000 கன அடி/வினாடி திறக்கப்படலாம்.