ஏர் இந்தியா விமான விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த ஒரே ஒரு நபர்!
எப்படி உயிர் தப்பினேன் என்று இன்னும் எனக்கு புரியவில்லை என அந்த நபர் பேட்டி கொடுத்துள்ளார்.

குஜராத் : இன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட Air India விமானம் AI171, புறப்படுதலுக்கு சில நிமிடங்களில் மேகனிநகர் என்ற குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 254 பேர் பயணித்தனர். விமானம் தரையில் மோதியதால் ஏற்பட்ட பயங்கர தீயால் பெரும்பாலானவர்கள் உயிரிழந்தனர்.
இந்திய அரசு மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் உறுதிப்படுத்தியபடி, 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் இந்த பயங்கர விபத்தில், அதிர்ஷ்டவசமாக விஸ்வாஸ் மிகுமார் என்ற ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.
விஸ்வாஸ் மிகுமார், (38) விமானத்தில் 11A என்ற இருக்கையில் அமர்ந்திருந்தார். விபத்தின் போது, அவர் விமானத்திலிருந்து தாவி வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ஊடகங்களின் அறிக்கைகளின்படி, விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் மற்றும் தீப்பிழம்புகள் குடியிருப்பு பகுதியில் பரவியதால், மீட்பு பணிகள் மிகவும் சவாலாக இருந்தன. இருப்பினும், அகமதாபாத் காவல்துறை ஆணையர் G.S. மாலிக், 11A இருக்கையில் இருந்த ஒரு பயணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உறுதிப்படுத்தினார். மிகுமாரின் உயிர் தப்பியது, இந்த பேரழிவில் ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஷ்வாஸ் குமார் ரமேஷ், இந்த பயங்கர அனுபவம் குறித்து பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: “விமானம் மேலே எழும்பிய சில நொடிகளில் ஒரு பலத்த சப்தம் கேட்டது. உடனே விமானம் கீழே விழுந்தது. கண் விழித்து பார்க்கும்போது, சுற்றிலும் சடலங்கள் கிடந்தன. எல்லாம் தீப்பிழம்புகளால் சூழப்பட்டிருந்தது. பயத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எழுந்து ஓடினேன்.”
இந்த விபத்து குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எப்படி உயிர் தப்பினேன் என்று இன்னும் எனக்கு புரியவில்லை. அந்த கணம் மறக்க முடியாத பயங்கரமான தருணம். என்னை மீட்டவர்களுக்கும், சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவினருக்கும் நன்றி,” என்றார். அவர் பேசிய வீடியோக்களும் வைரலாகி வருகிறது.