கோவை, நீலகிரி மாவட்டங்களில் 7 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்! பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.!
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 7 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 7 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
எனவே, அந்தந்த மாவட்டங்களில், அதனை எதிர்கொள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தி இந்த 7 மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை :
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.