திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!
புதுக்கோட்டை வடகாடு பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் திருவிழா தொடர்பானது இல்லை என்றும் வேறு காரணம் என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின் போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த தேரோட்ட பிரச்சனையில் வடகாடு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கும்பல் வீடுகள், இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த்து என்றும், இதில் சிலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து புதுக்கோட்டை காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், வடகாடு காவல் சரகத்தில் முத்துராஜா சமூகத்தினருக்கும் SC/PR தரப்பினருக்கும் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் தலீத் மக்கள் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீவைப்பு எனவும், 5 பேருக்கு அரிவாள் வெட்டு, பேருந்து கண்ணாடிகள் உடைப்பு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டுக்காயம் என செய்தி பரவி வருகிறது.
உண்மையில், வடகாடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நேற்று (மே 5) இரவு 10.30 மணியளவில் முத்துராஜா சமூகத்தைச் சோந்த நபர்களுக்கும்,SC/PR சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்குமிடையே யார் முதலில் பெட்ரோல் போடுவது என வாய்தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் பதிலுக்கு பதில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி SC/PR தரப்பினர் அவர்களது குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற நிலையில், முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு இருசக்கர வாகனங்களில், SC/PR தரப்பினரை பின்தொடர்ந்து சென்று மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஓருவரையொருவர் தாக்கி கொண்டனர். இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கூரை வீடு எரிக்கப்பட்டும், அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேற்படி சம்பவமானது குடிபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரியவருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என புதுக்கோட்டை காவல்துறை சார்பில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
புதுக்கோட்டை வடகாடு பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியகியுள்ளன.