தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!
பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கான தண்டனை விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், முதற்கட்டமாக 2019-ல் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு , 2021-ல் மேலும் ஹெரோன் பால், பைக் பாபு எனப்படும் பாபு, அருளானந்தம், மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் உள்ளனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். நந்தினி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இரு தரப்பு வாதங்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி நந்தினி இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை மே 13, 2025 அன்று வழங்க உள்ளதாக முன்னதாக அறிவித்திருந்தார். எனவே, இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கைது செய்யப்பட்ட அந்த 9 பேரையும் காவல்துறை கோவை மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் செய்தது.
ஆஜர் செய்யப்பட்ட பிறகு நீதிமன்ற கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்களும் பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்திரமோகன் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
இதனையடுத்து, தமிழகத்தை உலுக்கிய இந்த பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள் குறித்த அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்திரமோகன் செய்தியாளர்களை சந்தித்தபோது அறிவித்தார்.