விஜய் அரசியல் வருகை.. அவரால் விஜயகாந்த் ஆகிவிட முடியாது.! பிரேமலதா விஜயகாந்த் கருத்து.!

விஜய் அரசியலுக்குள் வந்தால் அவரால் விஜயகாந்தாகிவிட முடியாது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். அப்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிரான தீர்மானம், தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசுக்கு எதிரான தீர்மானம், மகளிர் உரிமை தொகையானது மாதம் 1000 ரூபாய் அனைத்து பெண்களுக்கும் தருவதாக அறிவித்துவிட்டு, தற்போது குறிப்பிட்ட பெண்களுக்கு தான் தருவோம் என அறிவித்து இருப்பதற்கு எதிரான தீர்மானம் என பல்வேறு தீர்மானங்கள் அங்கு நிறைவேற்றப்பட்டன.
இது போக மற்ற அரசியல் நிலவரங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. தேமுதிக தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை. கூட்டணியில் இல்லாததாலேயே டெல்லி கூட்டத்திற்கு பாஜக அழைக்கவில்லை. எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி என்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.
டெல்டாவில் கருகும் பயிர்களை காக்க திமுக அரசால் தண்ணீரை பெற்று தர முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி தலைவர்களிடையே முரண்பாடு உள்ளது. எனவே, தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில், யாருடன் கூட்டணி என்பது குறித்து கேப்டன் முடிவெடுப்பார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
மேலும், விஜயின் அரசியல் வருகை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என அவர் தான் கூற வேண்டும் என கூறினார். அப்போது, விஜய் அரசியல் பயணமானது, விஜயகாந்த் வழியில் உள்ளது. விஜயகாந்த் அரசியல் ஆரம்ப காலகட்டத்தில் 234 தொகுதியிலும் இலவச கணினி பயிற்சி அளிக்கப்பட்டது. அதே போல 234 தொகுதியிலும் விஜய் மாணவர்களுக்கு இலவச கல்வி பயிற்சி அளிக்கிறார். என விவாதிக்கப்பட்டது. அப்போது பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் வழியில் விஜய் அரசியலுக்கு வந்தால் மோசமான விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் எனவும் தேமுதிக கட்சி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சி பொருளாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூறினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.