இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில், நாகை மீனவர் தலையில் குண்டு பாய்ந்தது....!

A fisherman has been shot in the head by the Sri Lankan navy during a shootout with naga fishermen who went fishing.

மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், மீனவர் ஒருவரின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.

நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 28ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இவர்களின் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில படகில் இருந்த நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர் கலைச்செல்வன் என்பவரின் தலையில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திங்கட்கிழமை காலை நாகை மீனவர்கள் கரை திரும்பிய பின், உடனடியாக கலைச்செல்வன் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. இந்த சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.