அரக்கோணம்:போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் 22 ஆண்டுகளாக அரசு பணிபுரிந்த பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்..!

Suspended government school headmaster who worked for 22 years with a fake certificate in Arakkonam.

அரக்கோணத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் 22 ஆண்டுகள் பணிபுரிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தின், அரக்கோணம் பகுதியை சேர்ந்த ஷோபனா என்பவர்,கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, ஷோபனாவின் மதிப்பெண் சான்றிதழ்கள் பரிசோதனைக்காக கல்வித்துறை மூலம் மாவட்ட தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதில் உயர்கல்வி மதிப்பெண் சான்றிதழ் போலி என தெரிய வந்ததுள்ளது.இதன் காரணமாக,போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியாற்றியதால் ஷோபனா,மாவட்ட கல்வி நிர்வாகத்தால் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து,ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர் இந்திரா,போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து ஏமாற்றியதற்காக ஷோபனா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்,ஒரு பள்ளி தலைமை ஆசிரியரே இப்படி போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து 22 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார் என்ற செய்தி அங்கிருந்த ஆசிரியர்கள் அனைவரயும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.