இது கோழைத்தனமான காரியம்..! பிளாக்மெயில் கேங்கின் மலிவான அரசியல் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என அமைச்சர் விளக்கம்.
தமிழக அரசின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக அரசின் ஊழல் குறித்து பேசியதான ஆடியோ ஒன்றை சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் பெயர் அடிபட்டது. இந்த ஆடியோ திமுகவில், அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அமைச்சர் அறிக்கை:
எங்களுக்குள் விரிசலை ஏற்படுத்த பிளாக்மெயில் கேங்க் ஒன்று மலிவான அரசியல் ஈடுபடுகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் குறித்தோ, அமைச்சர் உதயநிதி குறித்தோ, தாம் எதுவும் தவறாக பேசவில்லை. நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுத்திக்காக பயன்படுத்தி ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.
கோழைத்தனமானது:
திமுக அரசின் சாதனைகளை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியாததால் இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றன. அடுத்த தலைமுறையின் நம்பிக்கையாக விளங்கும் உதயநிதிக்கு மக்கள் ஆதரவும் இருக்கிறது. எனவே, நான் பேசியதாக பொய்யான ஆடியோ வெளியிட்டது கோழைத்தனமானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆடியோ வெளியிட்ட நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.
திராவிட மாடல்:
மேலும், திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை எய்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் நான் ஏன் அவர்களைப் பற்றி தவறாக பேசவேண்டும்?, நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் சபரீசன் அவர்கள். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை.
பிளாக் மெயில் கும்பல்:
எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. இவர்களிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்ற துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல்.
ஒருபோதும் வெற்றி பெறாது:
ஆனால், இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. திமுக தொடங்கிய காலத்திலிருந்தே, ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனி வரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.