“திமுக கூட்டணியில் தான் இருப்போம்”… திருமாவளவன் திட்டவட்டம்!
திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சிகூட வெளியேற வாய்ப்பில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடலூர் : இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் எல்.முருகன் பேசிய கருத்துக்கும் பதில் அளிக்கும் விதமாக பேசினார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் ” ஊடகங்கள் தொடர்ச்சியாகவே திமுகவிடம் நாங்கள் கூடுதல் தொகுதி கேட்போமா? என கேள்விகளை எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் பதில் சொல்ல விரும்புகிறேன்.
கூடுதலாக நாங்கள் கொடுத்த பெற்றுக்கொள்வோம் இல்லை..குறைவாக கொடுத்தால் பெற்றுக்கொள்வோம் என்று சொல்ல முடியாது. எங்களுக்கு ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போது கூடுதல் தொகுதி வேண்டும் என கேட்டுக்கொண்டு இருக்கிறோம். ஒரு கூட்டணியில் பல கட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. எனவே, எல்லா கட்சிகளையும் அரவணைக்கவேண்டும் அந்த அடிப்படையில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினுடன் உரையாடும்போது சூழ்நிலையை கருத்தில் கொண்டும் வெற்றியை கருத்தில் கொண்டும் இது குறித்து பேசி முடிவு எடுப்போம்.
எனவே, இது பேச்சுவார்த்தை நடத்தியபிறகு கண்டிப்பாக இறுதிசெய்யப்படும். அதற்கு முன்கூட்டிய நாங்கள் இத்தனை இடம் கேட்போம்..அத்தனை இடம் கேட்போம் என்று சொல்ல முடியாது. நாங்கள் கேட்கும் தொகுதி கோரிக்கை நிறைவேறாவிட்டால் என்றால் அப்படியெல்லாம் கிடையாது..நாங்கள் எப்போதுமே திமுக கூட்டணியில் தான் இருப்போம். முடிந்த அளவுக்கு கூடுதல் இடம்கேட்க முயற்சி செய்வோம்” எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கு ஒரு கட்சி NDA கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக எல் முருகன் பேசியது குறித்து கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன் ” இப்படி அவர்கள் சொல்வதற்கான காரணமே திமுக கூட்டணியில் அவர்கள் ஒரு சலசலப்பை ஏற்படுத்த முயற்சி செய்வது தான். இப்படி ஒரு கருத்தை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்த இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்புகளே இல்லை” எனவும் திருமாவளவன் அந்த கேள்விக்கு பதில் அளித்தார்.