ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு இன்று அடையாள இறுதி சடங்கு!

இன்று நடைபெறவுள்ள அடையாள இறுதி சடங்கில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி பிரார்த்தனை செய்யவுள்ளார்.

Hasan Nasrallah

பெய்ரூட் :இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார்.

அதனால், இன்று அவருக்கு மத்திய பெய்ரூட்டில் உள்ள கர்பல்லாவில் அவருக்கு அடையாள இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. தொடக்கத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இருந்த சண்டையானது அதன் பின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்குமான போராக உருவெடுத்தது.

இதில், ஹிஸ்புல்லா அமைப்பை முற்றிலும் அளிப்போம் என உறுதியளித்த இஸ்ரேல், ஹிஸ்புல்லா மீது வான்வெளி தாக்குதலை மேற்கொண்டது. அதன் வெளிப்பாடாகவே கடந்த செப்-27ம் தேதி வான்வெளி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது.

இதில், லெபனானில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தியதில் அந்த அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், இந்த சண்டை தற்போது இஸ்ரேல்-ஈரான் சண்டையாக உருவெடுத்துள்ளது. இதனால், உலகம் முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், உயிரிழந்த ஹிஸ்புல்லா தலைவரான ஹசன் நஸ்ரல்லாவுக்கு, அமைப்பை சேர்ந்தவர்கள் நஸ்ரல்லாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று அடையாள இறுதி சடங்கு விழா நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஈரானைச் சேர்ந்த தலைமை மதகுருவான அயதுல்லா கொமேனி ஈரானில் இருந்தபடியே பிரார்த்தனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.