சி.எஸ்.கே அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதி..?

சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
உலகளவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு 8 அணிகளை சார்ந்த வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் அமீரகம் சென்றடைந்தனர். இந்நிலையில், ஐபிஎல் தொடருக்காக கடந்த 21- ம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டனர்.
இந்நிலையில், நேற்று மேற்கொண்ட பரிசோதனையில் தீபக் சாஹர் மற்றும் ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை அணியின் ருதுராஜ் என்ற வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை அணியில் இதுவரை கொரோனாவால் 14 பேர் பாதித்துள்ளனர். இதற்கிடையில், தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நடப்பு ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி உள்ளதால் இன்று சி்.எஸ்.கே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து சென்னை அணியில் கொரோனா பாதிப்பு மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா விலகல் ஆகியவை சென்னை அணிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது.