பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!
இந்த ஜி 7 மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதியில் புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்று ஜி7 நாடுகளின் தலைவர்கள் (அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான்) ஒருமித்த கருத்தை வெளியிட்டனர்.
இஸ்ரேலுக்கு தற்காப்பு உரிமை உள்ளதாகவும், ஈரான் மத்திய கிழக்கில் பிராந்திய அமைதியின்மை மற்றும் பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இந்த மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றத்தை தணிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 நாடுகள் நீண்டகாலமாக கவலை தெரிவித்து வருகின்றன. “ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை அனுமதிக்க முடியாது, இது பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” என்று ஜி7 தலைவர்கள் தங்கள் அறிக்கையில் வலியுறுத்தினர்.
ஈரானின் அணு ஆயுத முயற்சிகளுக்கு எதிராக, அமெரிக்கா ஈரானுக்கு புதிய அணு ஒப்பந்த முன்மொழிவுகளை அனுப்பியுள்ளது. இந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுப்பதற்கும், அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரான் இதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாகவும், அவர்களின் நலன்கள் மற்றும் உரிமைகளுக்கு ஏற்ப பதிலளிக்கப்படும் என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதியில் புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரேல்-ஈரான் மோதல், உக்ரைன் விவகாரம் மற்றும் வரி விதிப்பு போன்றவற்றில் ஜி7 நாடுகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், இது அவரது புறப்பாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பதிலாக, ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை கைவிட வலியுறுத்துவதாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் செயல்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.