இங்கிலாந்துக்கு எதிரா என்னால் 3 போட்டி தான் விளையாட முடியும்! பும்ரா எடுத்த முடிவு!
உடல் நலம் கருதி மருத்துவர்களின் அறிவுரைகள் படி பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டியில் மட்டுமே விளையாட முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும் தற்போது தயாராகி வருகிறார்கள். இதற்கிடையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முழு உடற்தகுதிபெற்று அணிக்கு திரும்பியுள்ளார்.
ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அவரே உறுதிப்படுத்தியுள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பும்ரா “நான் இந்தியாவுக்காக விளையாடும்போது என்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கமாட்டேன். எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அணிக்காக விளையாடவேண்டும் என்று நினைப்பவன். ஆனால், அதே சமயம் சில நேரங்களில் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். மருத்துவர்கள் கூறிய முடிவுகளின் அடிப்படையில் என்னால் இந்த தொடரில் மூன்று போட்டிகளில் தான் விளையாட முடியும்” என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மேலும் அவர் டெஸ்ட் போட்டிகள் குறித்து பேசுகையில் ” என்னைப்பொறுத்தவரையில் கிரிக்கெட்டில் உச்சம் என்றால் அது டெஸ்ட் கிரிக்கெட் என்று தான் சொல்வேன். ஏனென்றால்,டெஸ்ட் வடிவம் ஒரு வீரரின் உண்மையான திறமையை சோதிக்கிறது. இது எனக்கு மிகவும் முக்கியமானது, மேலும் இந்த வடிவத்தில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. இதில் வெற்றிபெற்றுவிட்டால் நம்மளுடைய திறமை என்னவென்று தெரியும்” எனவும் தெரிவித்தார்.
அவர் பேசியதை தொடர்ந்து தினேஷ் கார்த்திக், பும்ரா முதல், இரண்டாவது (எட்ஜ்பாஸ்டன், ஜூன் 28-ஜூலை 2), மற்றும் நான்காவது (ஓல்ட் ட்ராஃபோர்ட், ஜூலை 23-27) டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று கணித்துள்ளார், இந்த இடைவெளிகள் அவரது உடலுக்கு ஓய்வு அளிக்க உதவும் என்று கூறினார்.
மேலும், இந்திய அணி, 18 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் வெற்றி (கடைசியாக 2007-ல் ராகுல் டிராவிட் தலைமையில் 1-0 வெற்றி) பெறுவதற்கு பும்ராவின் பங்களிப்பு முக்கியமாக இருக்கும். இங்கிலாந்தில் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் 37 விக்கெட்டுகளை (சராசரி 26.27) வீழ்த்தியுள்ள பும்ரா, இந்தத் தொடரில் 15 விக்கெட்டுகளை எடுத்தால், இங்கிலாந்தில் இந்திய பந்துவீச்சாளர்களில் இஷாந்த் ஷர்மாவை முந்தி (52 விக்கெட்டுகள்) முதலிடம் பிடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.