திமுக காரணமா? அன்புமணி சொன்னது அப்பட்டமான பொய்” – ராமதாஸ் விளக்கம்!

பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு திமுகவே காரணம் என அன்புமணி பேசியது குறித்த கேள்விக்கு ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

ramadoss and anbumani mk stalin

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று ராமதாஸ், தான் மீண்டும் கட்சியின் தலைவர் என்றும், அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மாமல்லபுரத்தில் மே 11 அன்று நடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டில் ராமதாஸ், அன்புமணியை மறைமுகமாக விமர்சித்தார்.

பிறகு, ஜூன் 13 அன்று ராமதாஸ், “என் மூச்சுக்காற்று இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்,” என்று கூறி, அன்புமணியின் செயல்பாடுகளால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், “அன்புமணியை 35 வயதில் ஒன்றிய அமைச்சராக்கியது எனது தவறு,” என்று மே 29 அன்று விழுப்புரத்தில் கூறியிருந்தார்.

அன்புமணி, ஜூன் 15 அன்று உலக தந்தையர் தினத்தையொட்டி, “ராமதாஸ் மீது கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள். ஒரு மகனாக, கட்சி தலைவராக உங்கள் கட்டளைகளை நிறைவேற்றுவேன்,” என்று உருக்கமாக பேசினார். ஆனால், இந்த மன்னிப்பு கோரல் கட்சி உட்கட்சி மோதலை தணிக்கவில்லை. ராமதாஸ், “அன்புமணி நிர்வாகிகளை என்னை சந்திக்க விடாமல் தடுக்கிறார்.

ஒவ்வொரு செங்கலாக கட்டிய பாமகவை அவர் உடைத்து விட்டார்,” என்று குற்றம்சாட்டினார். எனவே, பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. இப்படியான சூழலில், கடத்த ஜூன் 16 – ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், பாமகவை பலவீனப்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாகவும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு திமுகவே காரணம் என்றும் பேசியிருந்தார்.

இதனையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ்,  “பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு திமுகவே காரணம் என்று அன்புமணி கூறியது அப்பட்டமான பொய்,” என்று விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டனர்.

முதல் கேள்வியாக பாமகவில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுடன் பேசினீர்களா? என்கிற கேள்வியை முன் வைத்தனர். அந்த கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ் ” அவர்களுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பேசினேன். நன்றாக இருக்கிறார்கள்” என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பாமக குழப்பத்திற்கு திமுக காரணம் என அன்புமணி சொன்னது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ” அதற்கு அன்புமணி அப்படி கூறுவது அப்பட்டமான பொய்..கடைந்து எடுத்த பொய் அவ்வளவு தான்” என கூறி விளக்கம் அளித்தார்.

அதனைத்தொடர்ந்து இனிமேல் என்னிடம் கேள்வி கேட்டு ஊடக நண்பர்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்பதை கேட்டுக்கொள்கிறேன் எனவும் வேண்டுகோள் வைத்தார். அதன்பின், அன்புமணி மன்னிப்பு கேட்டதால் குழப்பம் தீருமா என்ற கேள்விக்கு, “போகப் போகத் தெரியும்,” என்று பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பதிலளித்துவிட்டு சென்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்