“போகப் போகத் தெரியும்” – அன்புமணி குறித்து கேள்விக்கு பாடல் பாடி ராமதாஸ் பதில்.!
பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு திமுக காரணம் என அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய் என பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.

சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள் மற்றும் குழப்பங்களுக்கு திமுக காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ராமதாஸ், சென்னையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அன்புமணி கூறிய குற்றச்சாட்டு ஒன்றை மறுத்து, அதனை “அப்பட்டமான பொய்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாமக கௌரவ தலைவரும் பென்னாகரம் எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், ஆகியோர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர், ”பாமகவில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு திமுக தான் காரணம் என அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்” என்றார். மேலும், அன்புமணி உங்களிடம் மன்னிப்பு கேட்பதாக மேடையில் தெரிவித்துள்ளார், உங்களிடம் நேராக கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா? என்ற செய்தியாளர் கேள்விக்கு ‘போகப் போகத் தெரியும்’ என பாடல் பாடி பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.
ராமதாஸின் இந்த பதில், கட்சியின் உள் விவகாரங்களை திமுக மீது பழி போடுவதற்கு பதிலாக, உண்மையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அன்புமணிக்கு மறைமுகமாக அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது.