மும்பை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்தனர்.
இன்றைய 5-வது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் சென்னை சேப்பாக்கத்தில் விளையாடி வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக் இருவரும் களம் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே குயின்டன் 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோகித்துடன் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர்.
அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து 56 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய இஷான் கிஷன் ஒரு ரன்னும், ஹார்திக் பாண்டியா 15 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். நிதானமாக விளையாடி வந்த ரோஹித் சர்மா அரைசதம் அடிக்காமல் 43 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா அணியில் ரஸ்ஸல் 5, பட் கம்மின்ஸ் 2 , ஷாகிப் அல் ஹசன், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டை பறித்தனர். 153 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.