TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!
தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான், அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.
ஜூன் 6 அன்று திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான திண்டுக்கல் போட்டியின் போது, கள நடுவர்களுடன் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டதற்கு 10%, கிரிக்கெட் சாதனத்தை அவமதித்ததற்காக 20% அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பபட்டது. இந்த நிலையில், அஸ்வின் இப்போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 14ம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியின் போது, அஸ்வின் மற்றும் அவரது அணியான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை மதுரை பாந்தர்ஸ் அணி முன்வைத்துள்ளது.
அன்றைய தினம், 151 ரன்கள் என்ற இலக்கை 45 பந்துகள் மீதமிருந்த நிலையில், டிராகன்ஸ் அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில், டிராகன்ஸ் அணிக்கு எதிராக பாந்தர்ஸ் அணி TNPL அணியிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், ரசாயனங்கள் தடவப்பட்ட துண்டு பயன்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளது. டேம்பரிங் காரணமாக, பந்து மட்டையுடன் தொடும்போது ஒரு உலோக ஒலி கேட்டதாக அந்த அணி கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, TNPL நிர்வாகம் அஷ்வின் மற்றும் அவரது குழுவினரின் தவறுகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறு பாந்தர்ஸ் அணியை கேட்டுக்கொண்டது. இருப்பினும், அணி இதுவரை எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இதற்கிடையில், TNPL இன் தலைமை நிர்வாக அதிகாரி பிரசன்னா கிருஷ்ணன், ” குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்தால் விசாரணை செய்ய குழு ஒன்று அமைக்கப்படும். பாந்தர்ஸ் தங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.