செஸ் உலகக்கோப்பை: அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஸ்முக் அசத்தல் வெற்றி.!
செஸ் உலகக்கோப்பை மகளிர் பிரிவின் அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை திவ்யா தேஸ்முக் அசத்தல் வெற்றி பெற்றுள்ளார்.

தாஷ்கண்ட் : 2025 FIDE மகளிர் உலகக் கோப்பை தொடர் தற்போது உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த அரையிறுதியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜாங்கியை (Tan Zhongyi) வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம், எலைட் செஸ் தொடர் ஒன்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை என்ற பெருமையும் பெற்றார்.
19 வயதான திவ்யா, முதல் ஆட்டத்தில் கருப்பு காய்களுடன் டிரா செய்த நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், FIDE மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையாக வரலாறு படைத்துள்ளார்.
மேலும், இந்த வெற்றி அவருக்கு 2026 மகளிர் கேண்டிடேட்ஸ் (Candidates) தொடருக்கு தகுதி பெறவும், முதல் கிராண்ட்மாஸ்டர் (GM) நார்ம் பெறவும் உதவியுள்ளது. திவ்யாவின் இந்த சாதனை இந்திய பெண்கள் செஸ்ஸில் ஒரு மைல்கல் தருணமாக பார்க்கப்படுகிறது.
இறுதிப் போட்டியில், இந்தியாவின் கொனேரு ஹம்பி மற்றும் சீனாவின் லேய் டிங்ஜியே (Lei Tingjie) இடையேயான அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுபவரை எதிர்கொள்வார். இந்த தொடரில் இந்தியாவின் ஆதிக்கம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது, ஏனெனில் இரண்டு இந்திய வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறியது இதுவே முதல் முறையாகும்.