ஆடி அமாவாசையை ஒட்டி தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்..!
ஆடி அமாவாசையை ஒட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

சென்னை : ஆடி அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நீர்நிலைகளில் குவிந்தனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, திருச்செந்தூர், தென்காசி குற்றாலம், திருநெல்வேலி பாபநாசம் தாமிரபரணி நதிக்கரை, கும்பகோணம் காவிரி ஆறு, மகாமக குளம் உள்ளிட்ட புண்ணிய தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீராடி, எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, மற்றும் மகாளய அமாவாசை ஆகியவை முக்கியமானவையாக கருதப்படுகின்றன. தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் அமாவாசை திதியைக் குறிக்கிறது. இந்த நாள் இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக இந்நாளில் தர்ப்பணம் செய்வது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைவதாகவும், சந்ததிகளின் வாழ்வு செழிக்கும் எனவும் ஐதீகம். சில இடங்களில் பாதுகாப்பிற்காக போலீஸார் பலத்த பந்தோபஸ்து செய்திருந்தனர்.