பிரிஜ் பூஷன் கைதாகாவிட்டால்…ஜூன் 9ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு.!

மல்யுத்த அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்-ஐ கைது செய்யுங்கள், இல்லையெனில் பெரிய போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள் என்று மத்திய அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர் வட மாநில விவசாயிகள் சங்கம்.
நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இந்திய மல்யுத்த வீராங்கனை பாலியல் விவகாரம். இந்த விவகாரத்தில், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்ய வேண்டும் என பல நாட்களாக போராடி வருகின்றனர் மல்யுத்த வீராங்கனைகள்.
சமீபத்தில், புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அடுத்ததாக தங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை ஆற்றில் விட போவதாக அறிவித்து பின்னர் விவசாயிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அதனை கைவிட்டனர். இப்படி பல்வேறு வகையில் தங்களது போராட்டங்களை மல்யுத்த வீராங்கனைகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக, குடியரசு தலைவரை சந்தித்து பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு நீதி கேட்க இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன.
தற்போது, மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு நிவர்த்தி செய்து, பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் ஜூன் 9ம் தேதி மல்யுத்த வீரர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தருக்கு பேரணி சென்று, நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். மேலும், மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என வட மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.