ஏற்றத்துடன் முடிவடைந்த சென்செக்ஸ்..! 66 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை..!

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அந்தவகையில், 2வது வாரத்தில் சென்செக்ஸ் 65,000 புள்ளிகளைத்தாண்டி சாதனையை படைத்தது. இந்நிலையில் 3வது வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையை படைத்தது.
இன்றைய வர்த்தக நாளில் 66,148 புள்ளிகளாக தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 529.03 புள்ளிகள் உயர்ந்து 66,589 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 146.95 புள்ளிகள் உயர்ந்து 19,711 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,060 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,564 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் குறியீடு 66 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம் நடைபெற்று வருவதால் முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதம் ரூ.30,000 கோடிக்கு மேலும், ஜூலை மாதத்தில் 14 ஆயிரம் கோடிக்கு மேல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதல்களால் பாரத ஸ்டேட் வங்கி, விப்ரோ லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட், மஹிந்திரா&மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.