தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்…ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் ’ஒரே ஆள் ஒரே பேச்சு’ என ரீதியில் பேசி வருகிறார் என அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்.

சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு திமுகவை விமர்சித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் “” மு.க.ஸ்டாலின் அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என கூறியுள்ளார். சரி நான் அவருக்கு இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்னவென்றால், என்னால் உங்களை தோற்கடிக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை (திமுகவை) தோற்கடிக்க தயாராக உள்ளனர். இவ்வளவு காலம் அரசியலில் மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவன் நான். 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் திமுகவை தூக்கி எறிவார்கள்” எனவும் உறுதியாக தெரிவித்தார்.
அவருடைய பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பாஜகவின் அஜண்டாவை போல ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் ’ஒரே ஆள் ஒரே பேச்சு’ என ரீதியில் பேசி வருகிறார். ’’தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது’’ எனச் சொல்லியிருக்கிறார். கடந்த பிப்ரவரியில் கோவைக்கு வந்த போது இதே டயலாக்கைதான் பேசினார். தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் அமித்ஷா காட்டும் அக்கறை என்பது பசுந்தோல் போர்த்திய புலி.
’’ஒடிசா, ஹரியானா, மஹாராஷ்டிரா, டெல்லி போல தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி மலரும்’’ எனச் சொல்லியிருக்கிறார் அமித்ஷா. கடந்த ஆண்டு நடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலைத் தமிழர்கள் எப்படி மறப்பார்கள்? ஒடிசாவில் ஆட்சியைப் பிடித்தது போலத் தமிழ்நாட்டைப் பிடிப்பார்களாம். ஒடிசாவின் லட்சணம்தான் இந்தியாவுக்கே தெரியுமே! ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்று 2024 ஜூன் 12-ம் தேதி ஆட்சியைப் பிடித்தது. 2024 டிசம்பர் வரையிலான ஐந்தே மாதத்தில் மட்டும் ஒடிசாவில் 769 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
41 கூட்டுப் பாலியல் பலாத்காரம் உள்பட 509 பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறார்கள். கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக 9 ஆயிரத்து 248 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 509 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது. அந்த ஒடிசாவின் ஆட்சியைத்தான் தமிழ்நாட்டுக்குத் தரப் போகிறார்களா?
பாஜக ஆட்சி எப்படி இருக்கும்? என்பதை மணிப்பூரில் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறோமே! மணிப்பூர் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன. 400-க்கும் மேற்பட்ட மத வழிப்பாட்டு தளங்கள் அழிக்கப்பட்டன. 70,000 பேர் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்தனர். இணையச் சேவைகள், முடக்கம், ஊரடங்கு உத்தரவு , பாலியல் கொடுமைகள், கண்டதும் சுட உத்தரவு என மணிப்பூர் முடங்கிப் போனது.
மணிப்பூர் பெண்களின் கற்புக்கே சவால் விட்டார்கள். கலவரத்தை பாஜக அரசு வேடிக்கை பார்த்தது. ஆனால், பிரதமர் மோடியும் அமைச்சர் அமித்ஷாவும் மணிப்பூர் அரசைப் பதவி நீக்கம் செய்யாமல், ’’முதல்வர் பிரேன் சிங் அமைதியை நிலைநிறுத்த உழைத்து வருகிறார்’’ என சர்டிபிகேட்தான் கொடுத்தார்கள். மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்த பிறகும் கூட வன்முறை வெறியாட்டம் நிற்கவில்லை. இன்றைக்கும் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இணையதளச் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியாத பாஜக, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்.
’2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி வெற்றிபெறும்” என்று அமித்ஷா தெரிவித்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டிற்கு வந்து இப்படிப் பேசுவது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது இதையே பேசினார். 2019, 2024 மக்களவைத் தேர்தல்களின் போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று பேசினார். அவர் பேசியது எதுவுமே கடந்த காலங்களில் நடக்கவே இல்லை. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவான நாளில் இருந்தே தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறது.
2018-ம் ஆண்டு தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தித் தொடங்கிய திமுக தலைமையிலான கூட்டணி 13 தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்றது. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற திமுக கூட்டணி 2026 தேர்தலில் மட்டுமல்ல அதன் பிறகு வரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றியைப் பெறும்” எனவும் மிகவும் காட்டத்துடன் அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
TNPL : “மேடம் இது அவுட் இல்லை”…டென்ஷனாகிய அஸ்வின்!
June 9, 2025