ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என மோடி கூறியுள்ளார்.

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் ஜூன் 18, 2025 அன்று தொலைபேசியில் பேசினார். சுமார் 35 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மற்றும் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து மோடி தெளிவாக விளக்கினார்.
உரையாடலின் போது மோடி, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்று ட்ரம்பிடம் திட்டவட்டமாகக் கூறினார். “போர் நிறுத்தத்தை முதலில் கோரியது பாகிஸ்தான். இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ சேனல்கள் வழியாக பேசினோம். அமெரிக்காவின் மத்தியஸ்தம் இதில் இல்லை,” என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
ட்ரம்ப், தான் மத்தியஸ்தம் செய்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாகவும், வர்த்தக அழுத்தங்கள் மூலம் இதை செய்ததாகவும் கூறியிருந்தார். ஆனால், மோடி இதை மறுத்து, இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். அது மட்டுமின்றி, “பாகிஸ்தான் மீண்டும் ஆத்திரமூட்டினால், இந்தியா கடுமையாக பதிலடி கொடுக்கும்,” என்று மோடி எச்சரித்தார்.
அதே சமயம் இருவரும் உரையாடியபோது ட்ரம்ப் மோடியை அமெரிக்காவுக்கு வர அழைத்தார். ஆனால், முன்பே திட்டமிடப்பட்ட பயணங்கள் காரணமாக மோடி மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக, இந்தியாவில் நடைபெறவுள்ள குவாட் உச்சி மாநாட்டிற்கு ட்ரம்பை அழைத்தார். ட்ரம்ப் இதற்கு உறுதியான பதில் அளிக்கவில்லை என்றாலும், இரு தலைவர்களும் இந்திய-அமெரிக்க உறவுகளையும், குவாட் கூட்டணியின் முக்கியத்துவத்தையும் பேசியதாகவும் இந்த தகவலை விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.