ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார்.

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா குறித்து இழிவாக விமர்சிக்கப்பட்ட வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த மாநாட்டில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மேடையில் அமர்ந்து இந்த வீடியோவை கண்டு ரசித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பரவலான விமர்சனங்களை தூண்டியுள்ளது

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில் ஏற்கனவே, திமுக அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்திருந்தார். அண்ணாவை விமர்சிப்பதை அதிமுக ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?

உங்கள் தாயை, மனைவியை விமர்சனம் செய்தாலும் இப்படிதான் சோற்றால் அடித்த பிண்டங்களாக அமர்ந்திருப்பீர்களா? அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? முருகன் மாநாடு, RSS நூற்றாண்டு, அடுத்து நாக்பூரில் பழனிசாமி தஞ்சம் அடைவாரா? இந்துத்துவத்தில் முற்றிலுமாக அதிமுக கரைந்துவிட்டது” என காட்டத்துடன் கூறியிருந்தார்.

அவரை தொடர்ந்து இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளிக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேசியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கச் சென்றதாகவும், ஆதீனத்தின் அழைப்பை ஏற்காமல் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.  அந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவரும் கலந்து கொண்டிருந்தார் என்றும், ‘வேல்’ வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் உடனான தொடர்பு இல்லை என்றும், கொள்கை வேறு, கூட்டணி வேறு என்றும், தங்கள் கொள்கையை ஒருபோதும் விட்டுத் தரமாட்டோம் என்றும் வேலுமணி வலியுறுத்தினார்.

அண்ணாவையும் பெரியாரையும் பற்றி வீடியோ வெளியிடுவார்கள் என்று தங்களுக்கு தெரியாது என்றும், 1999இல் தி.மு.க. – பாஜக கூட்டணி வைத்தபோது ஆர்.எஸ்.பாரதிக்கு அது தெரியாதா என்றும் வேலுமணி கேள்வி எழுப்பினார். பேரூர் ஆதீன நூற்றாண்டு விழாவில் பங்கேற்கச் சென்றது மத நிகழ்வுக்காகவே என்றும், தி.மு.க. தங்கள் தோல்வியை மறைக்க இதை அரசியலாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதே சமயம், ஆர்.எஸ்.எஸ் ஒரு தனி அமைப்பு, அவர்கள் எங்களை அழைப்பதில்லை, நாங்களும் அவர்களுடன் கலந்து கொள்வதில்லை என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெளிவுபடுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்