‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!
2026 சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்றவுடன் பெண்கள் மன நிறைவு அடையும் வகையில் உதவித்தொகை வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் நடந்த பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எந்த விதத்திலும் குறையாது என மத்திய அரசு தெளிவுபடுத்திவிட்டது.
தொகுதி மறுவரையறை பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை, அதற்குள் எப்படி கருத்து சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ”கல்வி என்றால் என் உயிர் மூச்சு, தமிழ்நாட்டில் அதிக கல்லூரிகளை திறந்த அரசு அதிமுக தான். அப்பாவின் பெயரை வைப்பதற்காக திமுக பல்கலைக்கழகம் அமைக்கிறது. ஆனால் நாங்கள் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்கலைக்கழகங்களை அமைத்தோம்”
2021ல் மகளிருக்கு ரூ.1,500 தருகிறோம் எனச் சொன்னோம். திமுக தரும் ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500-ஐ தவறவிட்டீர்கள். ஆட்சிக்கு வந்து 28 மாதங்களுக்குப் பிறகுதான் திமுக அரசு மகளிருக்கு ரூ.1000 தந்தது. தேர்தல் வரை மட்டுமே மகளிருக்கு உரிமைத் தொகையைத் தருவார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை தரப்படும் என்றார்.
மேலும், பாஜகவை கண்டு அதிமுக அஞ்சவில்லை, திமுகதான் அஞ்சுகிறது. தேர்தல் வரும்போது திமுக அமைச்சர்கள் அனைவரும் பத்திரமாக ஒரு இடத்தில் இருப்பார்கள்” என்றும் விமர்சனம் செய்துள்ளார்.