சென்னை : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும், கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த திருநங்கை அப்சரா ரெட்டி, அந்தப் பதவிகளில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
விலகல் அறிவிப்பு
அதிமுகவிலிருந்து தான் விலகுவதை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலமாக அவர் பொதுமக்களுக்குத் தெரிவித்தார். அந்தப் பதிவில், "எனது அரசியல் பயணம் இனி வேறு ஒரு பாதையில் பயணிக்கக்கூடும். இருப்பினும், மக்களுக்காகச் சேவையாற்ற வேண்டும் என்ற எனது முதன்மையான நோக்கமும் லட்சியமும் எப்போதுமே மாறாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ள தனது விரிவான ராஜினாமா அறிக்கையில், தனது மனவேதனையையும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான அன்பையும் அப்சரா ரெட்டி வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது "மிகுந்த மனவருத்தத்துடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எனது ராஜினாமாவைச் சமர்ப்பிக்கிறேன். அதிமுகவுடனான எனது உறவு மற்றும் பயணம் என்பது ஒருபோதும் வெறும் அரசியல் சார்ந்ததாக மட்டும் இருந்ததில்லை.
அது, புரட்சித் தலைவி 'அம்மா' அவர்கள் மீது நான் கொண்டிருந்த ஆழ்ந்த போற்றுதல், அன்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையில் வேரூன்றியதாகும். அவர்தான் எனக்கு எப்போதுமே அரசியல் உத்வேகமும் தலைவியும் ஆவார். மக்கள் சேவை, கண்ணியம், அனைவரையும் சமமாக உள்ளடக்குதல் ஆகிய நற்பண்புகளில் வேரூன்றிய அரசியலையே அம்மாவின் தொலைநோக்குப் பார்வை எனக்குக் கற்றுக்கொடுத்தது. அதையே நான் முழுமையாக நம்பி வந்தேன்.
என்னைப் பொறுத்தவரை, அரசியல் என்பது மக்களை உடைப்பதாக இருக்கக்கூடாது; உருவாக்குவதாக இருக்க வேண்டும். மக்களை விலக்கி வைப்பதாக இருக்கக் கூடாது. அனைவரையும் அரவணைத்துச் செல்வதாக இருக்க வேண்டும். சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, மக்களை ஒன்றிணைக்கும் பாலமாகவே அரசியல் இருக்க வேண்டும் என்பதே எனது உறுதியான நம்பிக்கையாகும்"
என்று அவர் தனது அறிக்கையில் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் தொடர்ந்து தீவிரமாகப் பங்களிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ள போதிலும், அவரது திடீர் விலகல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.