மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!
நாயகன் போன்ற மற்றொரு படத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக் லைஃப்’ திரைப்படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் கடந்த ஜூன் 5, 2025 அன்று வெளியாகி, ரசிகர்களை ஏமாற்றியது. 1987இல் வெளியான ‘நாயகன்’ படத்தின் வெற்றியை அடுத்து, இந்தக் கூட்டணியில் மற்றொரு காவியத்தை நமக்கு கொடுக்கும் கண்டிப்பாக படம் மறக்க முடியாத அளவுக்கு ஒரு தரமான படமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தை அளித்தது.
ரூ.200 கோடி பொருட்செலவில் உருவான இந்தப் படம், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் இருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. படம் வெளியான நாளில் இருந்தே படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்த காரணத்தால் படத்தால் எதிர்பார்த்த அளவுக்கு வசூலையும் ஈட்டமுடியவில்லை. இதுவரை படம் 150 கோடிகளுக்குள் தான் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்நிலையில், மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். 123 தெலுங்கு உடனான நேர்காணலில் அவர் கூறியதாவது “நாயகன் போன்ற மற்றொரு படத்தை எதிர்பார்த்தவர்களுக்கு, நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மீண்டும் அதே பாணியைப் பின்பற்றுவது எங்கள் நோக்கமல்ல. நாங்கள் வித்தியாசமான ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டோம், ஏற்கனவே நாயகன் எனும் படத்தை நாங்கள் எடுத்துவிட்டோம்.
எனவே, மீண்டும் அதே பாணியில் ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் இல்லை. ஆனால் பார்வையாளர்கள் எதிர்பார்த்தது வேறு, நாங்கள் வழங்கியது வேறு. எனவே, அதற்கு நான் இந்த நேரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்” எனவும் சற்று வேதனையுடன் பேசியுள்ளார். வெளிப்படையாகவே மணிரத்னம் தனது படத்தின் தோல்வியை ஒப்புக்கொண்ட காரணத்தால் அடுத்த படத்தை சிறப்பாக எடுங்கள் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.