நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!
ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல் இருப்பது குறித்து விளக்கம் அளித்தார். போரின் பதற்றம் உச்சத்தில் இருந்த நிலையில், ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான மோதல்களுக்கு மத்தியில் ரஷ்யாவின் உதவியை கோரியுள்ளார்.
இந்த கடிதத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஜூன் 23, 2025 அன்று மாஸ்கோவில் புட்டினிடம் நேரடியாக வழங்கினார். ஈரான் கேட்டுள்ள உதவி கடிதத்தை பார்த்த ரஷ்யா நாங்கள் உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என உறுதியளித்துள்ளது. அந்த கடிதம் குறித்து ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசுகையில் ஈரானின் தேவைகளுக்கு ஏற்ப உதவி வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இப்படியான சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உதவி என்றால் ஈரானுக்கு இராணுவ ஆதரவு இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். சென்ட் பீட்டர்ஸ்பர்க் பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், “இஸ்ரேலில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இது எங்கள் முடிவுகளில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். ரஷ்யாவின் நவீன வரலாற்றில் இதை நாங்கள் எப்போதும் மனதில் வைத்திருக்கிறோம்,” என்றார்.
ரஷ்யாவும் ஈரானும் நீண்டகால நட்புறவு கொண்டிருந்தாலும், “நாங்கள் ஈரானுக்கு ஆதரவாக போரில் இறங்கவில்லை. ஈரானின் அணு ஆற்றல் உரிமையை அமைதியான பயன்பாட்டிற்காக ஆதரிக்கிறோம். புஷ்ஷேர் அணு உலை கட்ட ஒப்பந்தம் செய்தோம், மேலும் இரண்டு உலைகளுக்கு ஒப்பந்தங்கள் உள்ளன. இது ஈரானுக்கு ஆதரவு இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார். ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களை ரஷ்யா கண்டித்தாலும், நேரடி இராணுவ உதவி அளிக்க புதின் தயங்குவதாகத் அவருடைய பேச்சின் மூலம் தெரிகிறது.
“ஈரான் மீதான தாக்குதல்கள் நியாயமற்றவை,” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை சந்தித்தபோது கூறிய புதின், “ஈரானுக்கு தேவையான உதவிகளைப் பொறுத்து செயல்படுவோம். மத்தியஸ்தத்திற்கு தயாராக உள்ளோம்,” என்று கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் மூலம் தெரிவித்தார். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ரஷ்யா இப்படி கூறியிருப்பது மத்தியஸ்த பங்கு வகிக்க முயல்கிறது, ஆனால் ஈரானுக்கு நேரடி இராணுவ ஆதரவு அளிக்க தயாராக இல்லை என்பது தெரிகிறது.