போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?
கிருஷ்ணாவின் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்புகள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கிருஷ்ணாவுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறையினர் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மற்றும் கொக்கைன் விநியோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் வழங்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் சுமார் இரண்டு மணி நேர விசாரணை நடத்தப்பட்டு, அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையில் போதைப்பொருள் பயன்பாடு உறுதியானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கில் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, அவரை விசாரணைக்கு ஆஜராகும் படி போலீசார் சம்மன் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் கிருஷ்ணா, ‘கழுகு’, ‘யாமிருக்க பயமே’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தற்போது கேரளாவில் படப்பிடிப்பில் இருக்கும் அவரை, சென்னைக்கு அழைத்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. இந்த வழக்கில், முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் மற்றும் பிரதீப் குமார் ஆகியோரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் கிருஷ்ணாவின் பெயர் அடிபட்டுள்ளது.
எனவே, இதன் காரணமாக கிருஷ்ணாவின் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்புகள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த வழக்கு தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்படுவது, மேலும் சில நடிகர்களின் பெயர்கள் வெளிவர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. விசாரணையின் முடிவில் முழு உண்மைகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.