#Breaking:மீண்டும் மிரட்டல்;டிச.4 முதல் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

The Chennai Meteorological Department has forecast heavy rains from December 4.

சென்னை:தமிழகத்தில் டிச.4 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததன் காரணமாக,பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேர ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் எனவும், அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

அதன்படி,இன்று அந்தமான் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் 24 மணி நேரத்தில் ஜவாத் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா- ஒடிஷா அருகே 4 ஆம் தேதி வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,டிச.4 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக,மதுரை,விருதுநகர்,நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் & அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் இருந்து மணிக்கு 70 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால், 5ம் தேதி வரை மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.