#Breaking:தரமற்ற உணவு:போராட்டம் நடத்திய 22 பெண் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு!

#Breaking: substandard food: Cases filed against 22 women who staged a protest!

காஞ்சிபுரம்:ஒரகடம் பகுதியில் போராட்டம் நடத்திய ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் 22 பெண் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இதில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில்,ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை அடுத்து,உயிரிழந்ததாகக் கூறப்படும் 8 தொழிலாளர்களின் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பணிக்காக வந்தவர்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து நேற்று முன்தினம் இரவு முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில்,போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,உண்மை நிலையை விளக்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.மேலும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோரின் பேச்சுவார்த்தையின் பேரிலும் தனியார் ஆலை முன் 18 மணி நேரமாக தொடர்ந்த பெண் தொழிலார்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன்படி,தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில்,ஒரகடம் பகுதியில் போராட்டம் நடத்திய ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் 22 பெண் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியது,பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே போராட்டம் நடத்தியதில் ஒரு பகுதியினர் கைது செய்யப்பட்ட நிலையில்,தற்போது 22 பெண் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.