"பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்"- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!

Action will be taken to install CCTV cameras in schools - School Education Minister Anbil Mahesh poyyamozhi

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான புகார்கள்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனால்,பள்ளிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்,பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும்,இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது:”பெண்குழந்தைகளின் பாதுகாப்பிற்காக,பள்ளிகளில் சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும் என்று அதிகமான கோரிக்கை வருகிறது.எனவே,அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும்,கல்வி என்பது மிகவும் முக்கியம்.அந்த கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும் தருவதுதான் அரசின் குறிக்கோளாக உள்ளது.

எனவே,தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதுதொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள குழுவிடம் புகார் செய்யலாம்”,என்று தெரிவித்தார்.