செப்டம்பர் முதல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் – ஏஐசிடிஇ அதிரடி அறிவிப்பு..!

AICTE has announced that classes will start from September 1 in all Technical colleges

அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக பள்ளி,கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக பாடம் படித்து வருகின்றனர்.

இந்நிலையில்,கல்லூரிகளின் புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ நிர்வாகம் திருத்தி வெளியிட்டுள்ளது.அதன்படி,

தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், முதுகலை மேலாண்மை நிறுவனங்கள், தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை அங்கீகாரத்தைப் பெற ஜூன் 30 கடைசித் தேதி ஆகும்.

அதே போல,பல்கலைக்கழகங்கள்,கல்வி வாரியங்கள் கல்லூரிகளுக்கான இணைப்பை வழங்க ஜூலை 15 கடைசித் தேதி ஆகும்.

2021- 22ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான,முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிவுபெறும்.

தொழில்நுட்ப படிப்புகளின் வகுப்புகள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் தொடங்கும்.

தொழில்நுட்ப படிப்புகளுக்கான முதல் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கும்.

முழுக் கட்டணத்தையும் திருப்பித் தரும் வகையில் தொழில்நுட்பப் படிப்புகளின் இடங்களைத் திரும்பப் பெற செப்டம்பர் 10 கடைசித் தேதி ஆகும்.

முதுகலை மேலாண்மை நிறுவனங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் வகுப்புகளைத் தொடங்கலாம். அதற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11 கடைசித் தேதி ஆகும்.

மேலும்,முழுக் கட்டணத்தையும் திருப்பித் தரும் வகையில் முதுகலை மேலாண்மைப் படிப்புகளுக்கான சேர்க்கை ரத்து செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 6 ஆகும்.

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்களை முழுக் கல்விக் கட்டணம் செலுத்த நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.

மாணவர்களிடம் கட்டணத்தை 4 தவணைகளில் வசூலிக்க வேண்டும்.

மேலும், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை எக்காரணம் கொண்டும் வேலையிலிருந்து நீக்கக் கூடாது. அவ்வாறு நீக்கப்பட்டிருந்தால் அந்த உத்தரவுகளைக் கல்லூரிகள் திரும்பப் பெற வேண்டும்.

பேராசிரியர்களுக்குரிய மாத ஊதியத்தை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும்.

கொரோனா தொற்றுநோய் தொடர்பான பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகள் அல்லது வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வகுப்புகள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் அல்லது கலப்பு முறையில் தொடங்கப்படலாம்.

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த அவ்வப்போது வெளியிடப்பட்ட பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி), இந்திய அரசு மற்றும் ஏ.ஐ.சி.டி.இ ஆகியவற்றால் வழங்கப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும்.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் – ஏஐசிடிஇ அதிரடி அறிவிப்பு..!