வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரிடம் ராகுல் காந்தி சமர்பிக்கவுள்ள நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் 2 கோடி பேரிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரை இன்று சந்தித்து வழங்குகிறார் ராகுல் காந்தி. இதன்காரணமாக டெல்லியில் காங்கிரஸ் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.