குஜராத்தில், பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனாவால் இறப்பு...!

A 15-day-old baby girl dies of corona in Surat, Gujarat...

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு  இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸின் 2 வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதற்கிடையில் மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லாமல் டாக்டர்கள் திண்டாடி வருகின்றனர்.இதனை தொடர்ந்து,வியாழக்கிழமை சூரத் நகரில் 26 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.மேலும் 1,551 பேர் புதிதாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியில் உள்ள டயமண்ட் மருத்துவமனையில்,பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனா வைரஸினால் பாதிக்கபட்டு இறந்துள்ளது.

இதுகுறித்து டயமண்ட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,”ஏப்ரல் 1 ஆம் தேதியன்று பிறந்த அப்பெண் குழந்தை பிறக்கும் போதே கொரோனா வைரஸ் தொற்றுடன்தான் பிறந்தது.ஏனெனில் அக்குழந்தையின் தாயும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.அதன் பின்னர், குழந்தையின் தாய் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும்,அப்பெண் குழந்தை வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டு,ரெமெடிசிவிர் என்ற கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டிருந்தது.இதனையடுத்து,சிகிச்சை பலனளிக்காமல் அக்குழந்தை வியாழக்கிழமையன்று இறந்தது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.