அதிமுக வெளியேறியதால் பாஜகவுக்கு பேரிழப்பு…பீகார் துணை முதலமைச்சர்!

tejashwi-yadav

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அதிமுக, கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தது. தமிழகத்தில் கடந்த ஒரு வருடமாக அதிமுக – பாஜக இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக, பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து, கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சால் அதிமுகவினர் எதிர்வினையாற்றி வந்தனர்.

முன்னாள் தலைவர்கள் ஜெயலலிதா, தற்போது பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை கருத்துக்கு, அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரித்தனர். இதனால், இரு கட்சிகளிடையே மோதல் நிலவியது. இருப்பினும், அதிமுகவில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாகவும், மற்றொரு தரப்பினர் கூட்டணி இல்லை என்றும் தெரிவித்தது. இதனால் அதிமுகவில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது.

ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். இந்த பிரச்சனைக்கு முடிவு கொண்டு வரும் நோக்கில் இரண்டு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, அதிமுக முக்கிய நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக தலைமையிடம், அண்ணாமலையை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுபோன்று பரபரப்பான அரசியல் சூழலில், கூட்டணி குறித்து இறுதி கட்ட முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார். இந்த சமயத்தில், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதாவது, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாகவும், வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் எனவும் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பாஜகவுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. அதிமுகவின் முடிவு பாஜக தேசிய தலைவர்களுக்கு இது அதிர்ச்சியை தந்துள்ளது. இருப்பினும், இந்த அறிவிப்பு அதிமுகவினரை கொண்டாட்டத்தில் ஈடுபட வைத்தது. அதிமுகவின் முடிவிற்கு சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு அளித்தனர்.

ஆனால், இந்த அறிவிப்பு குறித்து தமிழக பாஜக கூறுகையில், எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை, இதுதொடர்பாக மேலிடம் பேசிய பிறகு கருத்து கூறுகிறோம் என தெரிவித்தனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய கட்சி அதிமுக தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே,  பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய செய்தி தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

அந்தவகையில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து பிகார் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், அதிமுக வெளியேறியதால் பாஜகவுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இதைப் பற்றி நான் அதிகம் சொல்ல முடியாது.  அதிமுகவுக்கு முன்பே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம் ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. இது தேசிய ஜனநாயக கூட்டணி அர்த்தமற்றதாக மாறிவிட்டது என்பதையே தெளிவாக காட்டுகிறது. ஒரே ஒரு சர்வாதிகாரி உட்கார்ந்து இரண்டு பேர் நாட்டை நடத்துகிறார்கள் என்றும் தமிழ்நாட்டில் திமுக பலமாக உள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணி பலமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்