பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தில் 4 வது நாளாக இன்று 8 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர்.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பெறும் வகையில் பொருளாதார மீட்பு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். நேற்றைய அறிவிப்பில், விவசாயம், மீன்வளம், பால்வளம் உள்ளிட்ட துறைகளுக்கு 11 முக்கிய திட்டங்களை அறிவித்தார். இதனையடுத்து இன்று 4வது நாளாக முக்கிய 8 அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
நிலக்கரித்துறை :
நிலக்கரித்துறையில் கட்டமைப்பை மேம்படுத்த, ரூ.50,000 கோடி ஒதுக்கீடு. வணிக ரீதியாக நிலக்கரி எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி. முதற்கட்டமாக 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை அளிக்கப்படும். நிலக்கரி இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீத்தேன் வாயு திட்டத்திலும் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.
கனிமங்கள் :
கனிம சுரங்கங்களில் குத்தகையை பிற மாநிலங்களுக்கு மாற்றி கொள்வதற்கு அனுமதி. கனி சுரங்கங்களில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கப்படும். 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும். அலுமினிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பாக்ஸைட் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும். சுரங்கத் துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். சுரங்கங்களில் உள்ள கனிம பொருட்களைப் பிரித்துத்தெடுக்க ஒருங்கிணைந்த ஒப்பந்தங்கள் அனுமதி.
ராணுவ தளவாட உற்பத்தி:
ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் “மேக் இன் இந்தியா” திட்டம் பயன்படுத்தப்படும். சில ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டில் மட்டுமே உற்பத்தி செய்யும் வகையில், வெளிநாட்டு இறக்குமதிக்கு தடை செய்யப்படும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உதிரிபாகங்கள் இனி உள்நாட்டில் தயாரிக்கப்படும். ஆயுத உற்பத்தித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 49%-ல் இருந்து 74% ஆக அதிகரிப்பு. ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்திய வான்பரப்பு கட்டுப்பாடுகளில் தளர்வு :
இந்திய வான்பரப்பை பயன்படுத்துவதில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி மிச்சமாகும். வான் எல்லையை தாராளமாக பயன்படுத்த அனுமதி அளிப்பதன் மூலமாக, விமானங்களுக்கு எரிபொருளும், பயண நேரமும் குறையும். 6 விமான நிலையங்களில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும். விமான நிலையங்களின் தரம் உயர்த்தத்துவதற்கான பணிகள் அரசு, தனியார் ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும்.
யூனியன் பிரதேசங்களில் தனியாரிடம் மின் விநியோகம் :
புதுச்சேரி உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் தனியார்வசம் ஒப்படைக்கப்படும். தனியார் மயமாக்கப்படுவதால் மின்சார விநியோகம் மேம்படுவதுடன் அதன் தரமும் உயரும். மின் பகிர்மான நிறுவனங்களுக்கான புதிய வரி விதிப்புமுறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
விண்வெளித்துறையில் தனியாருக்கு அனுமதி :
செயற்கைகோள் தயாரிப்பு, ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க திட்டம். விண்வெளி ஆய்வு, விண்வெளிப் பயணம் உள்ளிட்டவற்றை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளலாம். இஸ்ரோ அமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி :
மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்கத் தனிமங்கள் தயாரிப்பதில் தனியார் பங்களிப்பு அனுமதி அளிக்கப்படும். புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.உணவுப்பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்க தனியார் பங்களிப்பு அனுமதி.
சமூக கட்டமைப்பு :
சமூக கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.8,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை, பள்ளிகளைக் கட்டமைப்பதில் தனியார் முதலீடுகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும். மேலும் மருத்துவமனை அமைப்பதற்கான மானியம் 30% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முக்கிய அறிவிப்புகள் ஆகும்.