அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலை சமாளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கினால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) தெரிவித்துள்ளது.
அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பக்சா, பர்பேட்டா, தர்ராங், துப்ரி, கோல்பாரா, கம்ரூப், லக்கிம்பூர், நல்பாரி மற்றும் உடல்குரி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சத்திற்கும் (4,07,700) அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவைத் தொடர்பு கொண்டு, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்துள்ளார்.
இது குறித்து அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மக்கள் தவித்து வருகின்றனர். நான் முதல்வர் ஹிமந்தபிஸ்வாவிடம் பேசி அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளேன். என்டிஆர்எஃப்(NDRF) குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.
unknown node